தமிழ்நாடு

சசிகலா மௌனம் குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் - டிடிவி தினகரன்

webteam

2023-ல் அமமுகவின் தேர்தல் வியூகம் வெளிப்படும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.

திண்டுக்கல் மேற்கு மாவட்ட அமமுக தகவல் தொழில்நுட்ப மகளிரணி செயலாளர் இ.ரஞ்சிதமின் இல்லத் திருமண விழா வரவேற்பு நிகழ்ச்சி மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் நடைபெற்றது. இதில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்... பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்திகளில் வருகிறது, போடாத ரோடுகளுக்கு கூட பணம் பெறுகின்றனர், திமுக என்றாலே ஊழல் கட்சி என்பதை தான் இது காட்டுகிறது.

அனைத்து மதத்தினருக்கும் நடுநிலையாக இருப்பது தான் ஒரு கட்சியின் நோக்கமாக இருக்க வேண்டும், ஆனால், மதசார்பற்ற கட்சி என கூறிக்கொண்டு இந்து மதத்திற்கு எதிராக பேசிவருகிறது திமுக. திமுக அரசு தேர்தலின் போது அளித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை, திமுகவிற்கு கூட்டணி பலம் இருந்தாலும் நாடாளுமன்ற தேர்தலில் பாடம்புகட்டி மக்கள் தோல்வியை தருவார்கள்.

2023-ல் அமமுகவின் தேர்தல் வியூகம் வெளிப்படும், ஜெயலலிதா மறைவிற்கு பின் ஓபிஎஸ் ஈபிஎஸ்யிடம் அதிகாரம், பணத்தை நம்பி மட்டும் தான் அவர்களுடன் சிலர் இருந்தனர், அதிமுக நீதிமன்றத்தின் மூலம் செயல்படாமல் இருப்பதற்கு ஓபிஎஸ் ஈபிஎஸ்ஸே காரணம், ஓபிஎஸ், ஈபிஎஸ் பிரச்னையால் தமிழகத்தில் அமமுக எதற்காக தொடங்கப்பட்டது என்பதை புரியவைத்துள்ளது,

ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழக அரசு சரியான முறையை கையாண்டு தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும். என்றவரிடம் சசிகலா மௌனம் குறித்த கேள்விக்கு... அது குறித்து அவரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும் என்றார்.