மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, புதிய கட்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். அதற்கான கொடியை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலா, டிடிவி தினகரன், திவாகரன் ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். இதனால், டிடிவி தினகரன், அமமுக என்ற கட்சியையும், திவாகரன், அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சியையும் தொடங்கினர். சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர்,அவருக்கும் தினகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதேநேரம், கடந்த 2022ஆம் ஆண்டு திவாகரன் தனது கட்சியை சசிகலா தலைமையின்கீழ் கொண்டுவந்தார். இந்த நிலையில்தான், 2026 தேர்தலில் சசிகலா தனிக்கட்சி தொடங்கவிருப்பதாகத் தகவல்கள் தெரிவித்தன. இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு இன்று (பிப். 24) சசிகலாவின் ஆதரவாளர்கள் நிகழ்வு ஒன்றை நடத்தினர்.
கோட்டைமேடு பகுதியில் நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் சசிகலா கலந்துகொண்டார். அவருடன் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சசிகலா ஆதரவாளர்கள் பலர் பங்கேற்றனர். அப்போது சசிகலா, தனது புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உருவம் பொறிக்கப்பட்ட கட்சிக் கொடியை வி.கே.சசிகலா அறிமுகப்படுத்தினார். புதிய கட்சியின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். பின்னர் பேசிய அவர், “அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் புதிய கட்சியைத் தொடங்குகிறேன்; நான் தொடங்க உள்ள புதிய கட்சி ஏழை, எளிய மக்களுக்கான கட்சியாக இருக்கும். எனது புதிய கட்சி திராவிடக் கட்சியாக இருக்கும். அந்தக் கட்சியின் மூலம் ஜெயலலிதா வழியில் துரோகிகளை அழிப்போம். 9 வருடங்களாக அமைதியாக இருந்ததுபோல் இனி என்னால் இருக்க முடியாது. இனியும் அமைதியாக இருந்தால் அது தொண்டர்கள், மக்களுக்கு செய்யும் துரோகம்” என்றார்.