தமிழ்நாடு

முடிவுக்கு வந்தது 4 ஆண்டுகால சிறைவாசம் - விடுதலையானார் சசிகலா!

webteam

கடந்த 4 ஆண்டுகாலமாக சிறையில் இருந்த சசிகலா இன்று காலை விடுதலையானார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று கடந்த 4 ஆண்டுகளாக பெங்களூர் அக்ரஹார சிறையில் இருந்தார் சசிகலா. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட சசிகலா கடந்த 20 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் உடல்நிலை சீராக இருப்பதாக விக்டோரியா மருத்துவமனை தெரிவித்துள்ளது.

சசிகலாவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் அவருக்கு கொரோனா தொற்றின் அறிகுறிகள் இல்லை என கூறப்பட்டுள்ளது. அவரது நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம், சுவாசம், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு உள்ளிட்டவை இயல்பான அளவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு செயற்கையாக ஆக்சிஜன் கொடுக்கப்படவில்லை என்றும் மருத்துவமனை கூறியுள்ளது. அவர் உணவு உட்கொள்வதாகவும், எழுந்து அமர்வதாகவும், ஊண்றுகோளுடன் நடப்பதாகவும் விக்டோரியா மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மருத்துவமனையில் இருந்தவாறே சசிகலா சிறை தண்டனை முடிந்து விடுதலையாகியுள்ளார். மருத்துவமனையில் இருக்கும் சசிகலாவிடம் காவல் அதிகாரிகள் ஆவணங்களில் மருத்துவர்கள் உதவியுடன் கையொப்பம் பெற்றனர். இதையடுத்து விடுதலை செய்யப்பட்டதற்கான ஆவணங்களை மருத்துவமனையில் சசிகலாவிடன் சிறைத்துறை ஒப்படைத்தது. இதனை அடுத்து 4 ஆண்டுகால சிறைவாசத்தில் இருந்து சசிகலா விடுதலை ஆகியுள்ளார். சிகிச்சையை தொடரவுள்ள சசிகலா, பிப்ரவரி முதல்வாரத்தில் சென்னை வருவார் என தகவல் வெளியாகியுள்ளது.