தமிழ்நாடு

சங்கரன்கோவில்: கோயில் யானையின் பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடிய பக்தர்கள்

webteam

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் உள்ள கோமதி யானையின் பிறந்த நாளை பக்தர்கள் கேக் வெட்டிக் கொண்டாடினர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் உள்ள பெண் யானையை பக்தர்கள் 'கோமதி' என்று அன்போடு அழைப்பார்கள். கடந்த 16.10.1994-ல் பிறந்த இந்த யானை 25.07.1997 ஆம் ஆண்டு தினத்தந்தி அதிபர் மறைந்த பா சிவந்தி ஆதித்தனரால் சங்கரநாராயண சுவாமி கோவிலுக்கு வழங்கப்பட்டது.

கோமதி யானை பிறந்து 28 ஆண்டுகளும், இக்கோவிலுக்கு வந்து 25 ஆண்டுகளும் ஆனதை கொண்டாடும் வகையில், கோமதி யானையின் பிறந்த நாளை சிறுவர்களும், இளைஞர்களும் சேர்ந்து கேக் வெட்டிக் கொண்டாடினர். இதையடுத்து யானைப் பாகன் சணல்குமார் கோமதிக்கு கேக் ஊட்டினார்.

இதைத் தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் கோமதியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. கோமதிக்கு அதிக அளவில் பழங்கள் வாங்கிக் கொடுத்து 'கஜ' பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. இதில், கோயில் ஊழியர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்