தமிழ்நாடு

சேலம்: யூ-டியூபர் மதனை காண கிருத்திகா வீட்டின் முன்பு குவிந்த இளைஞர்கள்

kaleelrahman

தலைமறைவாக இருந்த யூ-டியூபர் மதன் கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணைக்காக அவரது மனைவி கிருத்திகாவின் வீட்டிற்கு அழைத்துவரப்படுவார் என்ற தகவலை அடுத்து மதனை காண கிருத்திகாவின் வீட்டின் முன்பு இளைஞர்கள் குவிந்தனர்.

கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தியவர் பப்ஜி மதன். யார் இந்த மதன் என்று தெரியாத நிலையில் கடந்த செவ்வாய் கிழமையன்று சேலம் தாதகாப்பட்டி சீரங்கன் தெரு பகுதியைச் சேர்ந்த கிருத்திகா என்ற பெண்ணை சென்னை சைபர் க்ரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கிருத்திகா மதனின் மனைவி என்பது பின்னர் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தருமபுரி மதிகோன்பாளையம் பகுதியில் தலைமறைவாக இருந்த மதனை காவல் துறையினர் கைது செய்தனர். விசாரணைக்காக மதன் தாதகாப்பட்டி பகுதியில் உள்ள வீட்டிற்கு அழைத்து வரப்படுவார் என்ற தகவல் காட்டுத்தீ போல பரவியது. இதனையடுத்து மதனை காண இளைஞர்கள் பலர் அப்பகுதியில் குவிந்தனர்.

பப்ஜி மதன் குறித்த தகவல்களும், அவரது மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்ட விவகாரமும் சேலம் தாதகாப்பட்டி சீரங்கன் தெரு பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கௌரவமான குடும்பத்தில் பிறந்த கிருத்திகா அமைதியான பெண் என்றும் திடீரென கிருத்திகாவுக்கும் மதனுக்கும் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது என்றும் அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

மதன் அவ்வப்போது காரில் வந்து செல்வதை பார்த்துள்ளதாக கூறும் அப்பகுதி பெண்கள் ஆபாசமாக பேசிய மதன் நம் வீட்டிற்கு வந்து சென்றதை நினைக்கும் போதே அசிங்கமாக உள்ளது என்றும் தெரிவிக்கின்றனர்.