தமிழ்நாடு

சேலம்: டெபாசிட் பணத்தை திருப்பிக் கேட்டு கையை அறுத்துக் கொண்ட நபர் - வங்கியில் பரபரப்பு

kaleelrahman

தம்மம்பட்டியில் டெபாசிட் செய்த பணத்தை திருப்பித்தரக் கோரி ஸ்டூடியோ உரிமையாளர் கையை அறுத்துக் கொண்டார்.

திருச்சி மாவட்டம் கொப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (43). இவர், அதே பகுதியில் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் (கனரா வங்கி) கடந்த 2. 1ஃ2 ஆண்டுகளுக்கு முன்பு 3 லட்சம் ரூபாயை டெபாசிட்டாக செலுத்தியுள்ளார்.

இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆனந்தன் தனது தேவைக்காக வங்கியில் டெபாசிட் செய்த பணத்தை திருப்பி எடுக்கச் சென்றுள்ளார். அப்போது வங்கி ஊழியர்கள் ஆனந்தன் டெபாசிட் செய்த பணம் காப்பீடு திட்டத்தில் உள்ளதாலும் தொடர்ந்து பணம் கட்டாததாலும் நஷ்டம் ஏற்பட்டு மூன்றில் ஒரு பங்கு பணமே இருப்பதாகவும் கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து ஆனந்தன் அந்த பணத்தை நான் டெபாசிட் தான் செய்தேன் என்று கூறி வங்கி பணியாளர்களிடம் கேட்டுள்ளார். பின்னர், இதுகுறித்து தம்மம்பட்டி காவல் நிலையத்திலும் ஆனந்தன் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து நேற்று மீண்டும் வங்கிக்கு வந்த ஆனந்தன் தனக்கு பணம் வேண்டும் முடிவு தெரியாமல் செல்லமாட்டேன் என அவரது மனைவி பாலாமணி ஆகியோர் வங்கியில் அமர்ந்து கொண்டு வெளியே செல்ல மறுத்துள்ளனர்.

இதையடுத்து, இரவு வரை காத்திருந்ததால் வங்கி ஊழியர்கள் தம்மம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், வங்கியில் இருந்து அவர்களை வெளியேற்றும் முயற்சிசியல் ஈடுபட்டுடிருந்தனர். அப்போது திடீரென ஆனந்தன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கையை அறுத்துக் கொண்டார் இதில் காயமடைந்த அவரை ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக போலீசார் அனுப்பி வைத்து தம்மம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.