செய்தியாளர்: S.மோகன்ராஜ்
சேலம் கோரிமேடு அருகே சரஸ்வதி நகரில் 65 வயதான அன்னலட்சுமி என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்துள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்ட இவரை கன்னங்குறிச்சியில் வசித்து வரும் அவரது மகள் கலைச்செல்வி உணவு மற்றும் மருத்துவ சிகிச்சை வழங்கி பராமரித்து வந்துள்ளார். இந்த நிலையில், வழக்கம்போல இன்று காலை, உணவு கொடுப்பதற்காக கலைச்செல்வி தாயின் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது வீட்டில் உடல் கருகிய நிலையில் அன்னலட்சுமி சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இது குறித்து கன்னங்குறிச்சி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்ட அன்னலட்சுமி மன உளைச்சலால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது மின் கசிவு காரணமாக உடல் கருகி உயிரிழந்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.