தருமபுரி மாவட்டம் அரூர் வழியாகச் செல்லும் சென்னை - சேலம் பசுமை விரைவுச் சாலை ரூ.10,000 கோடியில் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இந்தச் சாலை, சென்னை முதல் அரூர் வரையிலான தேசிய பசுமைச் சாலை 179- பி எனவும், அரூர் முதல் சேலம் வரையிலான பசுமைச்சாலை 179 -ஏ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சாலையானது காஞ்சிபுரம் மாவட்டத்தில் 59 கிலோமீட்டர் தூரமும், திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு, வந்தவாசி, போளூர், ஆரணி, செங்கம் பகுதியில் 122 கிலோ மீட்டர் தூரமும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 கிலோமீட்டர் தூரமும், தருமபுரி வட்டத்தில் தீர்த்தமலை, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வழியாக 53 கிலோமீட்டர் தூரமும், சேலம் மாவட்டத்தில் 38 கிலோ மீட்டர் தூரமும் அமைய உள்ளது.
இந்தப் பசுமை சாலை அமைக்கப்படுவதால், சென்னை - சேலம் இடையிலான பயணத் தூரமும், நேரமும் வெகுவாகக் குறையும். அதாவது, சேலத்தில் இருந்து சென்னைக்கு 3 மணி நேரத்தில் பயணம் செய்யும் வகையில் சாலை வசதிகள் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவீன கட்டமைப்பு வசதிகளுடன் 8-வழிச்சாலையாக அமையும் இந்தப் பசுமை விரைவுச்சாலையில் வாகனங்கள் வெளியேறுவதற்கும், உள்ளே நுழைவதற்கும் பாதுகாப்பு வசதிகள் இருக்கும். இந்தியாவில் ஏற்கெனவே மும்பை முதல் புனே வரையிலும் தேசிய பசுமை வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது, இந்தியாவில் அமையும் 2-வது பசுமை வழிச்சாலை சேலம்-சென்னை இடையிலான விரைவுச் சாலையாகும். தருமபுரி மாவட்டத்தில் அரூர் பகுதியில் பசுமை விரைவுச்சாலை செல்லும் கிராமங்களின் தாம்பல், பூவம்பட்டிகாப்புக்காடு, வேடக்கட்டமடுவு, கட்டவடிச்சாம்பட்டி, தீர்த்தமலைக் காப்புக்காடு, பாளையம், கூடலூர், வீரப்பநாய்க்கன்பட்டி, ஈட்டியம்பட்டி, கம்மாளம்பட்டி, எல்லப்புடையாம்பட்டி, அரூர்(சுமைத்தாங்கிமேடு), மாவேரிப்பட்டி, லிங்காபுரம், நாச்சினாம்பட்டி, நம்பிப்பட்டி, சின்னாங்குப்பம், பேதாதம்பட்டி, மாலகபாடி, புளிதியூர், கொக்கராப்பட்டி, எருமியாம்பட்டி, பாப்பம்பாடி, மூக்காரெட்டிப்பட்டி, இருளப்பட்டி, அ.பள்ளிப்பட்டி காப்புக்காடு,அலமேலுபுரம் உள்ளிட்ட வருவாய் கிராமப்பகுதிகளில் இந்தச் சாலை அமையும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரூர் பகுதியில் முதல் கட்டப் பணிகளாக பசுமை வழிச்சாலை செல்லும் பகுதியில் குறுக்கிடும் கிராமச்சாலை ஓரங்களில் கான்கிரீட்டால் அளவு கற்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பணி தீர்த்தமலை, பாளையம், எம்.தாதம்பட்டி(முத்தானூர்), சுமைத்தாங்கி மேடு ஆகிய இடங்களில் சுமார் 100 மீட்டர் அகலம் உள்ளவாறு சாலையின் எல்லைக் கற்கள் கான்கிரீட்டால் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த எல்லைக் கற்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள விவசாய நிலங்களை சேர்ந்த விவசாயிகள், தங்களது நிலத்தில் இந்த சாலை செல்வதால், விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும் என விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர். இந்த கற்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் பல ஏக்கர் விவசாய நிலங்களும், வீடுகளும், அரசு பள்ளி கட்டடங்களும் எடுக்கப்படும் சூழல் இருப்பதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மேலும் இந்த சாலைகள் அமைப்பதற்கான காரணங்கள் குறித்து தெரிவிக்கப்படாமலும், எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென கற்கள் அமைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும் பசுமை விரைவு சாலை செல்லும் பகுதியில் உள்ள விவசாயிகளை அழைத்து அரசுப் பேச்சுவார்த்தை நடத்தாமலும், பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு மாற்று ஏற்பாடு குறித்து தெரிவிக்கப்படாமலும் அரசு செயல்படுவதால், விவசாயிகள் கடந்த சில நாட்களாக வேதனையில் ஆழ்ந்து வருகின்றனர். மறுபுறம் பசுமை விரைவு சாலை அமைவதன் நோக்கம், மலைகளில் உள்ள கனிம வளங்களை வெட்டி எடுக்கவே என பொதுமக்களிடையே பேசப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்ட முழுவதும் விவசாயத்தை பிரதானமாக கொண்டு வானம் பார்த்த பூமியாக இருந்து வருகிறது. இருக்கிற கொஞ்சநஞ்ச நிலத்தை சாலைக்காக எடுத்து கொண்டால் தங்களது எதிர்காலம் கேள்வி குறியாகிவிடும் நிலையுள்ளது.
இதனால் பசுமை விரைவு சாலையை வேறு பகுதிக்கு மாற்ற வேணடும் அல்லது தொழில் வளர்ச்சி இல்லாத தருமபுரி மாவட்டத்திற்கு வேலைவாய்ப்புக்கான வசதியை ஏற்படுத்த வேண்டும் என அரூர் பகுதியில் உள்ள விவசாயிகளும், பொதுமக்களும் தெரிவிக்கின்றனர்.
(தகவல்கள்: விவேகானந்தன் செய்தியாளர்)