செய்தியாளர்: S.மோகன்ராஜ்
சேலம் மாநகரின் மையப்பகுதியான நான்கு ரோடு சந்திப்பு அருகே ஆதம்பாஷா என்பவருக்குச் சொந்தமான பிரியாணி கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் தீ பற்றியுள்ளது. உடனடியாக இதுகுறித்து செவ்வாய்பேட்டை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனிடையே தீ மளமளவென பற்றி கொளுந்து விட்டு எரிந்த்து.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென கடையில் இருந்த இரண்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இருப்பினும் கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் தீக்கிரையானது.
இந்த சம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்றிரவு சேலத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்த நிலையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.