தமிழ்நாடு

சென்றுகொண்டிருந்த பேருந்தில் திடீரென பற்றிய தீ.. பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநர்..!

webteam

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வேம்படிதாளம் வழியாக இளம்பிள்ளை பகுதிக்கு தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
இப்பேருந்தில் சுமார் 50 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென பேருந்தின் இன்ஜின் பகுதியில் புகை வந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் கார்த்தி உடனடியாக பேருந்தை நிறுத்தியுள்ளார்.

இதனையடுத்து பேருந்தில் உள்ள அனைத்து பயணிகளும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். பேருந்தில் இருந்து பயணிகள் வெளியேறிய சில நிமிடங்களில், இன்ஜினில் பற்றிய தீ பேருந்து முழுவதும் பரவியுள்ளது. முன்னெச்சரிக்கையாக ஓட்டுநர் கார்த்தி எடுத்த நடவடிக்கையால் பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

இதனையடுத்து தகவலறிந்த சூரமங்கலம் தீயணைப்பு நிலையத்தினர், சம்பவ இடத்திற்கு சென்று பேருந்தில் பற்றிய தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து காரணமாக கந்தம்பட்டி புறவழி சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் இன்ஜினில் எலக்ட்ரிக் ஷாக் ஏற்ப்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.