தமிழ்நாடு

சேலம்: மளிகை கடையில் புகுந்து வடமாநில இளைஞர் கடத்தல் - 6 பேர் கொண்ட கும்பல் துணிகரம்

kaleelrahman

சேலத்தில் மளிகை கடையிலிருந்து வடநாட்டு இளைஞரை கடத்திச் சென்ற 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

அதிகாலை முதலே ஆள் நடமாட்டம் மிகுந்து பரபரப்பாக காணப்படும் சின்னக்கடை வீதி பகுதியில் முலாராம் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஜெய்ராம் கடை நிர்வாகத்தை கவனித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் ஜெய்ராம் கடையை திறந்து வியாபாரத்தை தொடங்கியுள்ளார்.

அப்போது வழக்கமான வியாபாரம் நடந்து கொண்டிருந்த வேளையில் கடைக்குள் புகுந்த 6 பேர் கொண்ட கும்பல் ஜெய்ராமை மிரட்டி தாக்கி சட்டையை பிடித்து இழுத்துச் செல்லும் காட்சிகள் கடையிலிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளன. இதையடுதது ஜெயராமை அந்தக்கும்பல் ஒரு காரில் கடத்திச்சென்றது.

இதனிடையே இந்த கடத்தல் சம்பவம் குறித்து முலாராம் சேலம் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு நேரில் வந்த போலீசார், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆள்நடமாட்டம் மிகுந்த வர்த்தக பகுதியில் காலை நேரத்தில் நிகழ்ந்த இந்த துணிகர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.