தமிழ்நாடு

சேலம்: பைக் மீது டேங்கர் லாரி மோதிய சாலை விபத்தில் தந்தை - மகன் பரிதாப உயிரிழப்பு

kaleelrahman

சேலம் அருகே நேர்ந்த சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த தந்தை மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டம் வெள்ளிமலை பகுதியைச் சேர்ந்த செல்வம், அவரது 13 வயது மகன் விக்னேஷ் மற்றும் செல்வத்தின் அண்ணி இளவரசி ஆகியோர் உடையாப்பட்டி புறவழிசாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, நான்குவழி சாலை இருவழி சாலையாக மாறும் இடத்தில் குறுகலான சாலையில் இவர்களது வாகனத்தை டேங்கர் லாரி ஒன்று கடக்க முயன்ற போது செல்வம் நிலைதடுமாறி விழுந்ததில் டேங்கர் லாரியின் பின் பக்க சக்கரத்தில் சிக்கினர்.

இந்த விபத்தில் செல்வம் மற்றும் அவரது மகன் விக்னேஷ் தலைசிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் பலத்த காயமடைந்த செல்வத்தின் அண்ணி இளவரசி சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து அம்மாப்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.