தமிழ்நாடு

உண்ணாவிரதம் அறிவித்தார் சடகோப ராமானுஜ ஜீயர்

rajakannan

வைரமுத்துவை கண்டித்து நாளை முதல் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார்.

தனியார் பத்திரிகை நடத்திய நிகழ்வு ஒன்றில் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசினார். அவர் ஆண்டாளின் பிறப்பு குறித்து தவறுதலாக பேசிவிட்டதாக சர்ச்சை எழுந்தது. இதற்கு தமிழகம் முழுக்க இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது. 

இந்த விவகாரத்தில் வைரமுத்து பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி, சடகோப ராமானுஜ ஜீயர் ஆண்டாள் கோயிலில் உண்ணாவிரதம் இருந்தார். பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த உண்ணாவிரதத்தை அவர் முடித்துக் கொண்டார். ஆனால் பிப்ரவரி 3-ம் தேதிக்குள் ஆண்டாள் சன்னதியில் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார். 

இதனிடையே, ராமானுஜ ஜீயரின் “இறை நம்பிக்கைக்கு எதிராக யார் பேசினாலும், இனி அமைதியாக போகமாட்டோம். கல் எறியவும், சோடா பாட்டில் வீசவும் எங்களுக்கும் தெரியும். ஆனால் செய்ய மாட்டோம்” என்ற பேச்சு விமர்சனத்திற்குள்ளானது. பின்னர், பிப்ரவரி 3-ம் தேதி அறிவித்தபடி அவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவில்லை. வைரமுத்துவுக்கு எதிராக மீண்டும் உண்ணாவிரதம் இருப்பது குறித்து பக்தர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று கூறினார்.

இந்நிலையில், ஆண்டாள் சந்நிதியில் மன்னிப்பு கேட்காத வைரமுத்துவை கண்டித்து நாளை முதல் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார்.