தமிழ்நாடு

பைபாஸ் சர்வீஸ் சாலையில் யாருமில்லாமல் நின்ற 2½ வயது சிறுவன்..டாக்டர் செய்த பொறுப்பான செயல்

webteam

பூந்தமல்லி அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட்டில் தவறிய குழந்தையை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்த மருத்துவரை ஆவடி காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டினார்.

வேலூர் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருபவர் நந்தகுமார் (30), இவர் கடந்த 3 ஆம் தேதி இரவு இவர் அய்யப்பன்தாங்கலில் இருந்து வேலூர் செல்ல குமணன்சாவடி வழியாக பைபாஸ் சர்வீஸ் சாலயில் சென்று கொண்டிருந்தார். அப்போது அழுதபடி 2 1ஃ2 வயது சிறுவன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தான்.

இந்நிலையில், சந்தேகமடைந்த நந்தகுமார், காரை நிறுத்தி விட்டு அந்த சிறுவனிடம் சென்று விசாரித்துள்ளார். அப்போது தனது பெயர் உமர் என தெரிவித்துள்ளார். இதையடுத்து நள்ளிரவு நேரம் என்பதாலும் பெற்றோர் யாரும் இல்லாததால் சந்தேகமடைந்து சிறுவனை மீட்டு பூந்தமல்லி போலீசாரிடம் ஒப்படைத்தார்.

இதையடுத்து நடைபெற்ற போலீஸ் விசாரணையில், பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் அர்திக் பாஷாவின் மகன் என்பதும் கடைக்குச் சென்று பொருட்களை வாங்கிக் கொண்டு லிப்டில் வீட்டிற்குள் சென்றபோது லிப்ட்டில் இருந்து கீழே இறங்கிய சிறுவன், காவலாளிகளையும் மீறி அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே வந்தது தெரியவந்தது.

இதையடுத்து பெற்றோரை அழைத்து அறிவுரை கூறி குழந்தையை ஒப்படைத்தனர். இதற்கிடையில் குழந்தையை பத்திரமாக மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த மருத்துவர் நந்தகுமார் மற்றும் பூந்தமல்லி காவல்துறையினரை ஆவடி காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

அப்போது குழந்தை மற்றும் பெற்றோரையும் வரவழைத்து சந்தித்து ஆணையர் அறிவுரை கூறினார். இதற்கிடையில் சுட்டிக் குழந்தை திரைப்படத்தில் வருவது போல் குழந்தை அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து சாலையை நோக்கி ஓடி செல்லும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.