தமிழ்நாடு

அரசுப் பேருந்தில் காவலர்கள் இலவசமாக பயணிக்க அனுமதி உள்ளதா? - ஆர்.டி.ஐ. பதில்

webteam

தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் பஸ் வாரன்ட் இன்றி அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க முடியாது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தெரியவந்துள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அரசுப் பேருந்தில் ஏறிய தலைமைக் காவலர் டிக்கெட் எடுக்க மறுத்து நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன் காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளான ஓட்டுநர் கோபிநாத் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த நிலையில் காவலர்கள் அரசுப் பேருந்தில் இலவசமாக பயணிக்க அனுமதி உள்ளதா? என்று ஈரோட்டைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேள்வி எழுப்பியிருந்தார். 

அதற்கு காவல்துறை பணியமைப்புக்கான தலைவர் பதில் அளித்துள்ளார். தமிழ்நாடு காவல் துறையில் பணிபுரியும் காவலர்கள் பணி நிமித்தம் அல்லாமல் சொந்தத் தேவைக்காக அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும்போது பயணச்சீட்டு வாங்க வேண்டும் என பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி நிமித்தமாக பஸ் வாரன்ட் பெற்று அரசுப் பேருந்தில் பயணித்தால் பயணச்சீட்டு பெறத் தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.