online scam web
தமிழ்நாடு

தமிழகத்தை அதிரவைக்கும் ரூ.400 கோடி கிரிப்டோ மோசடி.. 40,000 சாமானிய மக்களை குறிவைத்து SCAM!

தமிழகத்தில் அரங்கேறியுள்ள 400 கோடி ரூபாய் கிரிப்டோ கரன்சி மோசடி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

குறுகிய காலத்தில் அதிக வட்டி, பணம் இரட்டிப்பு என வாக்குறுதி அளித்த ‘FQL Exchange App’, ‘VG Investment’ மூலம் 40,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஏமாற்றப்பட்டு ரூ.400 கோடி கிரிப்டோ மோசடி நடந்துள்ளது. RBI அங்கீகாரம் இல்லாத ஆப்களில் முதலீடு செய்ய வேண்டாம் என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் சிவகங்கை ஆகிய நான்கு மாவட்டங்களில் ஏழை, எளிய மக்களிடம் 'FQL Exchange App' மற்றும் 'VG Investment' என்ற செயலிகள் மூலம் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறி இந்த பிரம்மாண்ட மோசடி நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 40 ஆயிரம் புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

மக்களிடம் பெறப்பட்ட ரொக்கம் மற்றும் கூகுள் பே பணத்தை கிரிப்டோ கரன்சியாக மாற்றி, போலி ஆப் மூலம் பணம் பெருகுவதுபோல காட்டி ஏமாற்றியுள்ளனர். தொடக்கத்தில் சிலருக்குச் சிறிய தொகையைத் திருப்பித் தந்து நம்பிக்கையை ஏற்படுத்திய இந்தக் கும்பல், பெரிய அளவில் பணம் சேர்ந்ததும் கணக்குகளை முடக்கிவிட்டுத் தலைமறைவாகிவிட்டது.

Mobile Apps

பணம் மோசடி செய்யப்பட்ட நிலையில், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இந்த மெகா மோசடி தொடர்பாகப் பதியப்பட்ட 6 வழக்குகளையும் தீவிர விசாரணைக்காகத் தமிழக பொருளாதார குற்றப்பிரிவுக்கு (EOW) மாற்றி சட்டம்-ஒழுங்கு டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டு, 13 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. பணத்தை இழந்தவர்களிடம் இருந்து புகார் மனுக்களைப் பெற காவல் துறை சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

online scam

குறுகிய காலத்தில் அதிக வட்டி அல்லது பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறும் ரிசர்வ் வங்கி அங்கீகாரமில்லாத எந்தவொரு செயலியிலும் மக்கள் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம் என்றும், கிரிப்டோ கரன்சி சார்ந்த போலி ஆசைகளில் சிக்கி ஏமாற வேண்டாம் என்றும் காவல் துறை எச்சரித்துள்ளது. இத்தகைய மோசடிகளில் சிக்கினால் பொதுமக்கள் உடனடியாக 1-9-3-0 என்ற சைபர் கிரைம் எண்ணில் புகார் அளிக்கலாம்.