தமிழ்நாடு

சென்னை: போதைப்பொருள் சோதனையில் ரூ.2 கோடி ஹவலா பணம் பறிமுதல்

Sinekadhara
சென்னையில் போதைப் பொருள் கடத்தலை தடுக்க மேற்கொண்ட வாகன சோதனையில் 2 கோடி ரூபாய் ஹவாலா பணம் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 கோடி ரூபாய் பணத்துடன் காரில் வந்த இருவர் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் துறைமுகம் உதவி ஆணையர் வீரக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் வடக்கு கடற்கரை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மண்ணடி தம்புசெட்டித் தெரு பகுதியில் இன்று மதியம் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட காரை மடக்கி தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் காரின் பின்புறம் கட்டுக்கட்டாக பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார் காரில் பணத்துடன் வந்த இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பிடிபட்ட  நபர்கள் ஜெய்சங்கர் மற்றும் நாராயணன் என்பது தெரியவந்தது. மேலும், பிடிபட்ட தொகை சுமார் 2 கோடி ரூபாய் என்பதும், பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட 2 கோடி ரூபாய் பணமும், பிடிபட்ட இரு நபர்களும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
செய்தியாளர் - சுப்பிரமணியன்