தமிழ்நாடு

சென்னையில் ரூ.10 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல் - குடோன் உரிமையாளர் கைது

webteam

சென்னையை அடுத்த திருவேற்காட்டில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்காவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 

சென்னையை அடுத்த திருவேற்காடு அடுத்த சுந்தரசோழ புரத்தில் தடை செய்யப்பட்ட குட்கா அதிகளவில் விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து, சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமாரி மேற்பார்வையில், ஆய்வாளர் பிரபு தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் மாறு வேடத்தில் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் திருவேற்காடு சுந்தரசோழபுரம், விநாயகர் கோயில் தெருவில் உள்ள சந்தேகத்திற்கு இடமான குடோனை சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட குட்கா முட்டைகளில் இருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து அந்த குடோனின் உரிமையாளர் வீரமணி என்பவரை கைது செய்து விசாரித்தனர். அதில், வீரமணி அதே பகுதியில் கடை நடத்தி வருவதும், வாரம் ஒரு முறை பெங்களூரில் இருந்து தடை செய்யப்பட்ட குட்காவை மொத்தமாக வாங்கி வந்து, குடோனில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் இவருக்கு குட்கா கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். அந்த குடோனில் இருந்து சுமார் 10லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்காவை பறிமுதல் செய்து திருவேற்காடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர், இதனை தொடர்ந்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.