தமிழ்ப் பரப்புரைக் கழகத்தை உருவாக்குவதற்காக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
தமிழ் மொழியை கற்பிக்க தமிழ் பரப்புரை கழகம் உருவாக்கப்படும் எனவும், பல படிநிலைகளாக பாடங்கள் கற்பிக்கப்பட்டு சான்றிதழ் தேர்வும் நடத்தப்படும் எனவும் சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இக்கழகம் மூலம் தமிழ் மொழியின் பண்பாடு மற்றும் கலாசார பரப்புரைப் பணிகள், ஒலி - ஒளி உச்சரிப்புடன் பாடப்புத்தகத்தை வடிவமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என அரசு கூறியிருந்தது.
மேலும் இணையத்தில் தமிழ் ஆசிரியர்கள் மூலம் கற்றுத்தருதல், தமிழை வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு கற்பிக்கும் அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்குதல் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்படும் என அரசு கூறியிருந்தது. இந்நிலையில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.