தமிழ்நாடு

ரூ.1.27 கோடி வரி செலுத்தாத BSNL நிறுவனம்! ஜப்தி நோட்டிஸ் ஒட்டிய காஞ்சிபுரம் மாநகராட்சி!

webteam

வரி பாக்கி செலுத்தாததால் காஞ்சிபுரத்தில்  உள்ள மத்திய அரசின் பிஎல்என்எல் நிறுவனத்தின் வாசலில் ஜப்தி நோட்டிஸ் ஒட்டியுள்ளது காஞ்சிபுரம் மாநகராட்சி.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள, நிதி பாக்கியை வசூலிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், காமராஜர் தெரு, வணிகர் வீதி என இரு பகுதிகளில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் பி.எஸ்.என்.எல் தொலைதொடர்பு நிறுவனம், கடந்த 2014ஆம் ஆண்டு முதல் சொத்து வரி, குடிநீர் வரி, பாதாள சாக்கடை வரி முதலியவற்றை செலுத்தவில்லை என தெரிகிறது.

இதுகுறித்து பலமுறை நோட்டீஸ் அளித்தும் வரிபாக்கி செலுத்தாத நிலையில், மீண்டும் நோட்டிஸ் அளிக்க மாநகராட்சி அதிகாரிகள் பிஎஸ்என்எல் அலுவலகம் சென்றனர். ஆனால் அப்போதும் அந்த அலுவலக அதிகாரிகள் நோட்டீஸை வாங்க மறுத்ததால், அலுவலக வாசலில் ஜப்தி நோட்டிசை மாநகராட்சி அதிகாரிகள் ஒட்டினர்.

இதுவரை சொத்து வரி, குடிநீர் வரி மற்றும் பாதாள சாக்கடை வரியாக ரூ.1.27 கோடி பாக்கி வரியாக இன்னும் மாநகராட்சிக்கு செலுத்தவில்லை என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.