ஓசூரில் இருந்து லண்டனுக்கு அனுப்பப்பட்ட 2 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்து மூலப் பொருட்களை கன்டெய்னரிலிருந்து திருடிய விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அக்பர் என்பவர் சென்னையில் இன்று கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அக்பர் ஏற்கனவே இரண்டு முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர். கடந்த ஜனவரியில் நடந்த சம்பவத்தில் நேற்று முன்தினம் கன்டெய்னர் ஓட்டுநர் ரமேஷ் பாபு, முகமது அலி ஜின்னா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ஓசூரில் இருந்து எண்ணூர் துறைமுகம் நோக்கி கடந்த ஜனவரி மாதம் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான மருந்து மூலப்பொருட்கள் வந்து கொண்டிருந்தது. பிறகு கப்பல் மூலமாக லண்டனில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நிறுவனத்தின் அதிகாரிகள் கன்டெய்னரில் சோதித்துப் பார்த்தபோது மருந்து மூலப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அந்நிறுவனத்தினர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து புகார் குறித்து மாதவரம் பால் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கன்டெய்னர் லாரி ஓட்டுனர் ரமேஷ்பாபு என்பவர் தான் கொள்ளையடித்தது தெரிந்தது. இதையடுத்து ரமேஷ்பாபுவை போலீசார் கைது செய்தனர். தற்போது இவ்வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட அக்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.