தமிழ்நாடு

சாலையோரம் கொட்டிக்கிடந்த ரூ.500 கட்டுகள்: ஆசையில் அள்ளிச்சென்ற மக்கள் - போலீசார் விசாரணை

webteam

வேலூர் அருகே சாலையோரம் கிடந்த 14.30 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் கொணவட்டம் சென்னை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் இன்று காலை காரில் வந்த கும்பல் ஒன்று கட்டுகட்டாக 500 ரூபாய் நோட்டுகளை கொட்டிவிட்டு சென்றுள்ளனர். காற்றில் பறந்த ரூபாய் நோட்டுகளைக் கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ரூபாய் நோட்டுகளை போட்டி போட்டு எடுத்துள்ளனர். இதுகுறித்து வேலூர் வடக்கு துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவலர்கள் அங்கு சிதறி கிடந்த ரூபாய் நோட்டுகளை சேகரித்து, பொதுமக்கள் எடுத்து வைத்திருந்த ரூபாய் நோட்டுகளையும் வாங்கினர். அதனை காவல் நிலையம் கொண்டுவந்து எண்ணிய போது ரூ.14 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரிய வந்தது.

ரூபாய் நோட்டுகளை சோதனை செய்தபோது அது கலர் ஜெராக்ஸ் எடுத்த கள்ள நோட்டுகள் எனத் தெரியவந்தது. கள்ள நோட்டுகளை வீசிச்சென்ற கும்பல் யார் என்பதை அறிய அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வுசெய்து வருகின்றனைர். இன்று காலையில் தேசிய நெடுஞ்சாலையில் வந்த வாகனங்கள் குறித்த விவரங்களையும் சேகரித்து வருகின்றனர். காற்றில் பறந்த ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் சிலர் எடுத்துச் சென்றனர். அவர்கள் இந்த ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தக்கூடாது என காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வியாபாரிகள் 500 ரூபாய் நோட்டுகளை வாங்கும்போது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு பள்ளிகொண்டா அருகே காரிலிருந்து லாரிக்கு பணத்தை மாற்றியபோது போலீசாரிடம் ரூ.14.70 கோடி சிக்கி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று தேசிய நெடுஞ்சாலையில் கள்ள நோட்டுகளை வீசிச்சென்ற சம்பவம் வேலூரில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.