தமிழ்நாடு

மாணவர் சேர்க்கைக்கு ரூ.1.50 லட்சம் லஞ்சம் - முன்னாள் பள்ளி முதல்வருக்கு 5 ஆண்டு சிறை!

ஜா. ஜாக்சன் சிங்

மாணவர் சேர்க்கைக்கு ரூ.1.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக சென்னையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி முன்னாள் முதல்வருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னையை அடுத்த நெற்குன்றம் கிருஷ்ணாநகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர், கடந்த 2018-ம் ஆண்டு தனது மகனை சென்னை அசோக்நகரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் முதலாம் வகுப்பில் சேர்ப்பதற்காக விண்ணப்பித்துள்ளார். அப்போது, அந்த சிறுவனை பள்ளியில் சேர்க்க வேண்டுமானால் ரூ. 1.50 லட்சம் வேண்டும் என பள்ளி முதல்வராக இருந்த ஆனந்தன் கேட்டதாக தெரிகிறது.

பள்ளியில் சேர்க்கும்போது ஒரு லட்சம் ரூபாயும், 15 நாட்களுக்கு பின்னர் மீதமுள்ள 50 ஆயிரம் ரூபாயை வழங்குமாறு அவர் கேட்டராம். இதுகுறித்து ராஜேந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில், சிபிஐ அதிகாரிகள், பள்ளி முதல்வர் ஆனந்தனை லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி வெங்கடவரதன், பள்ளி முதல்வர் ஆனந்தன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையில் ரூ. 30 ஆயிரத்தை புகார்தாரரான ராஜேந்திரனுக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.