தமிழ்நாடு

ஜாமினில் வெளிவந்த ரவுடி : மர்ம கும்பலால் வெட்டிக்கொலை

webteam

தஞ்சையில் ஒருமாத ஜாமினில் வெளிவந்த ரவுடியை மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்தனர். 

தஞ்சை மாவட்டம் தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையத்திற்கு உட்பட்ட கூத்தங்குழி கிராமத்தில் கடந்த ஆண்டு அய்யனார் கோயில் கிடா வெட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உறவினர்களிடையே ஏற்பட்ட பிரச்சனையில் ஒருவரை தாக்கி காயப்படுத்திய வழக்கில் சுளுக்கி என்கின்ற மணிகண்டன் கைது செய்யப்பட்டார். தமிழ் பல்கலைக்கழக காவல்துறையினர் அவரை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில் மணிகண்டன் ஒருமாத ஜாமினில் வெளிவந்தார். இன்று காலை மணிகண்டன் ஆடுகளுக்கு புல் வெட்ட புல் பண்ணைக்கு சென்றபோது, மறைந்திருந்த 10க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் அவரை அரிவாள் மற்றும் கட்டையால் மண்டையில் தாக்கினர். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்தக் கொலை குறித்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். மணிகண்டன் மீது தஞ்சை தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.