பழைய குற்ற வழக்குகளில் போலீசார் தன்னை தொல்லை செய்வதாக அசோக் நகர் காவல் நிலையம் முன்பு வாலிபர் ஒருவர் பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நெசப்பாக்கம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி சுமித்ரா. கார்த்திக் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர். போலீசார் கார்த்திக்கை பழைய குற்றவழக்குகளில் டார்ச்சர் செய்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தனது மனைவி சுமித்ராவிடம் கார்த்திக் கூறிய போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டு சுமித்ரா தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதனால் மனமுடைந்த கார்த்திக் குடிபோதையில் நேற்று இரவு அசோக் நகர் காவல் நிலையத்தின் முன்பு தன்னையும் தனது மனைவியையும் போலீசார் பிரிப்பதாக கூறி பிளேடால் கழுத்தை அறுத்து கொண்டார். உடனே அங்கிருந்த போலீசார் கார்த்திக்கை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அசோக் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.