காஞ்சிபுரத்தில் அடுத்த தாதா யார் என்ற மோதலில் பிரபல ரவுடி ஸ்ரீதரின் சகோதரர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் திருப்பதி குன்றம் பகுதியைச் சேர்ந்த கருணாகரன். இவர் அப்பகுதியிலுள்ள மண்டித்தெருவில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று மாலை அவரது கடையில் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த 6 பேர் கண் இமைக்கும் நேரத்தில் அவரைப் பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். இதில் நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் கருணாகரன் உயிரிழந்தார். அவருடன் இருந்த விக்கி என்பவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடியான ஸ்ரீதர் மறைந்த பின்னர் யார் அடுத்த தாதா யார் என, தணிகா மற்றும் தினேஷ் ஆகியோர் இரண்டு கோஷ்டிகள் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கடந்த மாதம் சதீஷ்குமார் என்பவர் கொலை செய்யப்பட்ட நிலையில் அதற்கு பழிவாங்கும் வகையில், ஸ்ரீதரின் உறவின் முறை சகோதரரான கருணாகரன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும் கொலை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.