தமிழ்நாடு

சென்னையில் ரோந்து சென்ற காவலரை வெட்டிய ரவுடிகள்..! போலீஸ் வலைவீச்சு..!

Rasus

சென்னையில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவலரை மதுப்போதையில் கத்தியால் வெட்டிய ரவுடிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னையில் தர்கா குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அருகே தகராறு நடப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் இ2 ராயப்பேட்டை காவல்நிலைய காவலர் ராஜவேலு ரோந்து சென்றார். அங்கு 5-க்கும் மேற்பட்ட ரவுடிகள் மது அருந்திக்கொண்டிருந்ததாக தெரிகிறது. அவர்களை காவலர் விலகி போகச்சொல்லியபோது, தனியாக வந்துள்ளதாக கூறி ரவுடிகள் தாக்கியுள்ளனர். தப்பிச்செல்ல முயன்றபோதும் விடாமல் கத்தியால் தலை மற்றும் முகத்தில் வெட்டியதாக தெரிகிறது.

பின்னர் அங்கிருந்து ஆட்டோவில் ரவுடிகள் தப்பியோடினர். காவலர் ராஜவேலுக்கு அதிகப்படியான ரத்தம் வெளியேறிய நிலையில் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதல் நடத்தியது ரவுடி அரவிந்தன் உள்பட 5 பேர் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், அவர்களை தீவிரமாக தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.