சென்னை தண்டையார்பேட்டை, நெடுஞ்செழியன் நகரை சேர்ந்தவர் வேலு. இவரது வீட்டில் ஆட்டோ ஓட்டுனரான ராஜா என்பவர், கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு குடியேறியுள்ளார்.
இந்நிலையில், வேலு தன் வீட்டில் வெளிநாடு உயர்ரக நாயான ராட்விலர் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜாவின் 7 வயது மகள் ஸ்மித்திகா ஶ்ரீ, நேற்று வீட்டு அருகே உள்ள கடைக்கு சென்று வீடு திரும்பிய போது வீட்டு வாசலில் இருந்த ராட்விலர் நாய் சிறுமியின் முகத்தில் கடித்து குதறியது.
இதைப் பார்த்து பதறிய சிறுமியின் தந்தை ராஜா உடனே நாயிடம் இருந்து சிறுமியை காப்பாற்றி உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும்நிலையில், இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.