தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லத்தின் மேற்கூறை இடிந்து விழுந்தது.
எட்டயபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு பெருமாள் கோவில் தெருவில் பாரதியார் பிறந்த இல்லம் உள்ளது. இந்த இல்லம் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் மகாதேவி என்பவர் காப்பாளராக பணியாற்றி வருகிறார். தமிழக அரசால் அரசுடமை ஆக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும்நிலையில், இங்கு பாரதியார் பயன்படுத்திய பொருள்கள் மற்றும் அவரது வாழ்க்கைக் குறிப்புகள் என பலப்பொருள்கள் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன. இதனை காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையும், மாலை 2.30 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் பார்வையிடலாம்.
மேலும், பகுதி நேர நூலகமும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினம், (26.3.2025) மாலை 6 மணிக்கு பார்வையாளர் நேரம் முடிவடைந்தவுடன், இல்லத்தின் உட்பகுதி கதவுகளை அடைத்த காப்பாளர் மகாதேவி, பின்னர் வெளிப்புறம் உள்ள கதவை மூடினார். இந்த நேரத்தில்தான், இந்த இல்லத்தின் முன்பகுதியில் உள்ள மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதனால் கீழ்தளமும் சேதமடைந்தது.
மேசை, நாற்காலி உள்ளிட்டவையும் சேதமடைந்தன. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலர் அவசரமாக வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்த வட்டாட்சியர் சுபா வந்து சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அப்பகுதியில் பொதுமக்கள் செல்லாத வகையில் தடுப்புகள் வைக்கப்பட்டு மின்சாரமும் துண்டிக்கப் பட்டுள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பாரதியார் இல்லம் உள்ளிட்ட 17 புராதன கட்டிடங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்க ரூ.150 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்து அறிவித்தார் என்பது குறிப்பிடதக்கது.
கூடுதலாக, 1973-ம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த மு.கருணாநிதி, எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் பிறந்த வீட்டை அரசு சார்பில் விலைக்கு வாங்கி அதனை நினைவில்லாமாக மாற்றினார்.