சென்னையில் காவல் ஆய்வாளர் ஒருவர் மீதே கொள்ளை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த இரும்புலியூரைச் சேர்ந்தவர் கட்டட ஒப்பந்ததாரர் முத்தையா. 72 வயதாகும் முதியவர் முத்தையா, கடந்த ஒன்றாம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் காவல் ஆய்வாளர் தாம்சன், தாம்பரத்தைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் பாண்டியன் மற்றும் அவரது மனைவியும் டிவி நடிகையுமான சஜினி ஆகியோர் செப்டம்பர் 29ஆம் தேதி தமது வீட்டுக்கு வந்ததாக கூறியிருந்தார். தனது மகன் கிறிஸ்டோபருக்கு தெரிந்தவர்கள் என்று கூறிய மூவரும் பத்து லட்சம் ரூபாய் தராவிட்டால், கிறிஸ்டோபரை கொன்று விடுவோம் என்று மிரட்டியதாக புகாரில் முத்தையா தெரிவித்திருந்தார்.
காவல்துறையை தொடர்பு கொள்ள முயன்ற போது தாம்சன், தானே ஆய்வாளர் என்பதால் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது எனக்கூறியதாக புகாரில் அவர் தெரிவித்துள்ளார். கத்திமுனையில் தம்மிடம் பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையை மூவரும் பெற்றுச் சென்றதாகவும் முத்தையா கூறியிருந்தார். அவரது புகார் பீர்க்கங்கரணை காவல்நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி தாம்சன், பாண்டியன் மற்றும் சஜினி மீது கொள்ளை, கூட்டுச்சதி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
லஞ்சப்புகாரில் தாம்சன் சிக்குவது ஒன்றும் புதிதல்ல. 2013ஆம் ஆண்டு சென்னை ஜெ.ஜெ. நகர் காவல் ஆய்வாளராக இருந்த தாம்சன், புகார் ஒன்றில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க அதிமுக பிரமுகரிடம் ரூ25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக பிடிபட்டார். இதுதொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தாம்சன், பின்பு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கும் போதே வெயிட்டாக பறித்துவிட்டார் என்பதே தாம்சன் மீது கொள்ளை வழக்குப் பதியப்படுவதற்கு காரணம் என்று காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது..