Villagers
Villagers pt desk
தமிழ்நாடு

திண்டுக்கல்: வீட்டின் கதவை உடைத்து திருட முயற்சி - சிறுவனை போலீசாரிடம் ஒப்படைத்த கிராம மக்கள்

webteam

செய்தியாளர்: விஜயபாண்டியன்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சிஞ்சப்பன்பட்டியை சேர்ந்தவர் அமுதவல்லி. இவரது கணவர் வேந்தராஸ் என்பவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் அமுதவல்லி உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக கிராமத்து வீட்டை பூட்டிவிட்டு ஒட்டன்சத்திரத்தில் உள்ள அவருடைய மகள் ரம்யா என்பவரின் வீட்டில் தங்கியுள்ளார்.

Police station

இந்நிலையில், இன்று அமுதவல்லியின் வீட்டிற்குச் சென்ற இரண்டு பேர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று திருட முயற்சி செய்துள்ளனர். இதனைக் கண்ட அக்கிராம மக்கள் வீட்டுக்குள் இருந்தவர்களை பிடிக்க முயற்சி செய்தனர்.

அப்போது ஒரு இளைஞர் தப்பியோடிய நிலையில் மற்றொரு 16 வயது சிறுவனை மடக்கிப் பிடித்தனர். அதன் பின்னர் அந்த சிறுவனை ஊரின் நடுவே இருந்த மின்கம்பத்தில் கட்டி வைத்துவிட்டு வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சிறுவனை மீட்டு வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய மற்றொரு நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப் பகலில் பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.