தமிழ்நாடு

தீரன் பட பாணியில் தொடர் கொள்ளை: 3பேர் கைது

webteam

தீரன் பட பாணியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.


சென்னையின் புறநகர் பகுதிகளில் சாலையில் நிற்கும் லாரிகளை திருடும் அடையாளம் தெரியாத நபர்கள், அந்த லாரியில் சென்று வழிப்பறியில் ஈடுபடுவதாககாவல்துறைக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து காவல்துறை ஆணையர்‌ விஸ்வநாதன் உத்தரவின் பேரில்‌, ஆவடி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில் காட்டூர் பகுதியில் வழிப்பறிக் கொள்ளையர்கள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு மாறு வேடத்தில் சென்ற காவல்துறையினர்,‌ ‌சோழவரத்தை சேர்ந்த மாடு விஜய், பாப்பா சதீஷ், விக்னேஷ்வரன் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

காவல்துறையினரின் விசாரணையில் இவர்கள் எவ்வாறு கொள்ளையில் ஈடுபடுகின்றனர் என்பதை தெரிவித்துள்ளனர்.  புறநகர் பகுதிகளில் சாலையில் நிற்கும் லாரிகளை கள்ளச்சாவி போட்டு திருடி செல்கின்றனர். அந்த வாகனத்தை இருட்டான இடத்தில் நிறுத்தி அவ்வழியே வருபவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர்கள் வழிப்பறியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து 2,40,000 ரூபாய் ரொக்கம் மற்றும் வெள்ளிக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தலைமறைவாக உள்ள இவர்களின் கூட்டாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.