தமிழ்நாடு

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு: மணமக்களுக்கு ஹெல்மெட்டை பரிசாக வழங்கிய நண்பர்கள்

webteam

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகனின் நண்பர்கள் ஹெல்மெட்டை பரிசாக அளித்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மணமக்களுக்கு ஒரே வண்ணத்தில் ஹெல்மெட்டை பரிசாக வழங்கிய நண்பர்களின் செயல் கவனத்தை ஈர்த்தது...

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சாலை விபத்துகள் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு அரசு சார்பில் போக்குவரத்து விதிகளை கடுமையாக்கி வருகின்றனர். இந்த நிலையில் தலைக்கவசம் அணிந்து சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வலியுறுத்தி போக்குவரத்துத் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த ஸ்ரீதர் - கவிதா தம்பதியரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என கோலாகலமாக நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவிக்க வந்த மணமகன் ஸ்ரீதரின் நண்பர்கள் புதுமண தம்பதியர்களுக்கு ஒரே நிறத்திலான ஹெல்மெட்டை பரிசாக வழங்கினர்.

இதையடுத்து இந்த நிகழ்ச்சிக்கு வந்த நண்பர்களும் கையில் ஹெல்மெட்டுடன் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர். அப்போது மணமக்கள் தங்கள் கையில் வைத்திருந்த ஹெல்மட்டை உயர்த்து பிடித்தது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கூடியிருந்த அனைவரின் கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லமால் விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.