தமிழ்நாடு

சாலை விபத்தில் குழந்தை உட்பட 3 பேர் பலி: 6 பெண்கள் உட்பட 10 பேர் படுகாயம்

kaleelrahman

லாரியின் பின்னால் மினிவேன் மோதிய விபத்தில் பெண் குழந்தை உட்பட 3 பேர் பலி 6 பெண்கள் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே சோத்துப்பாக்கத்தில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி திடீரென இடதுபுறம் திரும்பியது. அப்போது பின்னால் சென்ற மினிவேன் மோதிய விபத்தில் சென்னை பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தங்கப்பாண்டி (30) வீரன் (60) யாழினி (3) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் ஆறு பெண்கள் மூன்று ஆண்கள் ஒரு ஆண் குழந்தை உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இவர்கள் அனைவரும் உசிலம்பட்டி குல தெய்வம் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு திரும்பும் போது இந்த விபத்து நடைபெற்றுள்ளது.

மேலும் இறந்தவர்களின் உடல்களை மீட்ட மேல்மருவத்தூர் போலீசார், பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.