தமிழ்நாடு

சாலை விபத்து: காதுகுத்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரில் சென்ற 2 இளைஞர்கள் பலி

kaleelrahman

பாணாவரம் அருகே கார் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த பாணாவரம் வேடந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி. இவர், தனது குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வருகிறார். இந்நிலையில், ஜோதி மற்றும் அவரது குடும்பத்தினர் தனது பேரக்குழந்தைகளுக்கு காது குத்துவதற்காக வேடந்தாங்கல் கிராமத்திற்கு குடும்பத்துடன் காரில் வந்துள்ளார்.

அதேபோல் காதுகுத்து நிகழ்ச்சியில் பங்கேற்க ஆறு இளைஞர்கள் வேடந்தாங்கலில் இருந்து பாணாவரம் வேடந்தாங்கல் நோக்கி காரில் சென்றுள்ளனர். அப்போது எதிரே ஜல்லி ஏற்றி வந்த டிப்பர் லாரி, கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணம் செய்த அருண் (24) மற்றும் மற்றொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் பலத்த காயமடைந்த மூர்த்தி (22) சதீஷ் (25), சரவணகுமார் (24), ஏழுமலை (25) ஆகிய நான்கு பேருக்கு வாலாஜா அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்குமறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கார் விபத்து குறித்து பாணாவரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் குலதெய்வ வழிபாட்டிற்காக பெங்களூரில் இருந்து சொந்த கிராமத்திற்கு வருகைதந்தவர்கள் விபத்துக்குள்ளானது கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.