தமிழ்நாடு

மூலப்பொருட்களின் விலை உயர்வு: தீப்பெட்டி விலை ரூ. 1ல் இருந்து 2 ஆக உயர்வு

மூலப்பொருட்களின் விலை உயர்வு: தீப்பெட்டி விலை ரூ. 1ல் இருந்து 2 ஆக உயர்வு

kaleelrahman

மூலப்பொருட்களின் விலை உயர்வால் தீப்பெட்டி விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி தீப்பெட்டி விலை ரூ. 1ல் இருந்து ரூ 2 ஆக உயர்ந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடம், விருதுநகர் மாவட்டம் விருதுநகர், சிவகாசி, வேலூர் மாவட்டம் குடியாத்தம், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம் ஆகிய பகுதியில் தீப்பெட்டி உற்பத்தி செய்யப்படுகிறது. 50 முழு இயந்திர தீப்பெட்டி ஆலை, 300 பகுதி நேர இயந்திர தீப்பெட்டி ஆலை மற்றும் இவற்றை சார்ந்துள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீப்பெட்டி உற்பத்தி ஆலைகள் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், தீப்பெட்டி தொழிலில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் சுமார் 6 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெற்று வருகின்றனர். இதில் 90 சதவீதம் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டி இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக தீப்பெட்டி உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப்பொருள் பாஸ்பரஸ், குளரேட், மெழுகு, அட்டை, பேப்பர் என அனைத்துப் பொருள்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த மாதம் வரை ஒரு கிலோ பாஸ்பரஸ் ரூ. 410-ல் இருந்து ரூ. 850 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல், மெழுகு ஒரு கிலோ 62 ரூபாயில் இருந்து 85 ரூபாயாக உயர்ந்துள்ளது. குளோரைட் 70 ரூபாயில் இருந்து 82 ரூபாயாகவும், அட்டை 42 ரூபாயில் இருந்து 55 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இது தவிர பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டு இருப்பதால் வாகனங்களின் வாடகை கட்டணம் உயர்ந்து வருவதால் தீப்பெட்டி உற்பத்தி செலவும் அதிகரித்துள்ளதாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆகையால் தீப்பெட்டி விலையை 1 ரூபாயில் இருந்து 2 ரூபாயாக உயர்த்துவது என உற்பத்தியாளர்கள் முடிவு செய்து டிசம்பர் 1-ஆம் தேதி முதல் விலை உயர்வு அமலுக்கு வரும் என்று தெரிவித்திருந்தனர். அதன்படி இன்று முதல் தீப்பெட்டி விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.