குழந்தை சுர்ஜித்தை மீட்க ரிக் இயந்திரம், மீட்புப் பணி நடைபெறும் இடத்திற்கு வந்தடைந்தது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். தற்போது 100 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி 31 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது குழந்தையை மீட்க புதிய முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. அதாவது ஆழ்துறை கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழி தோண்டி, குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. என்எல்சி, ஒஎன்ஜிசி, தனியார் அமைப்புகள் இணைந்து போர்வெல் அமைக்கும் கருவி மூலம் குழித் தோண்டப்பட உள்ளது. ஆழ்துளை கிணறுக்கு அருகில் 3 மீட்டர் தொலைவில் 1 மீட்டர் அகலம், 90 அடி ஆழத்தில் இந்தக்குழி தோண்டப்படும்.
குழி தோண்டும் பணிக்காக ரிக் இயந்திரம், மீட்புப் பணி நடைபெறும் இடத்திற்கு வந்தடைந்துள்ளது. புதிதாக தோண்டப்படும் குழியில், தீயணைப்பு வீரர்கள் மூன்று பேர் இறங்கி குழந்தை சுர்ஜித்தை மீட்க உள்ளனர். இதனிடையே குழி தோண்டும் பணியை ரிக் இயந்திரம் இன்னும் 1 மணி நேரத்தில் தொடங்க உள்ளது.