காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்ந்து வரும் கனமழை காரணமாக, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 50ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும், பரிசல் சவாரிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் ஆற்றில் நீர் வரத்து 24ஆயிரம் கன அடியாக இருந்தது. இந்நிலையில், தருமபுரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்துவரும் நிலையில் தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு இன்று நண்பகல் நிலவரப்படி 50ஆயிரம் கன அடி வரை தண்ணீர் வந்தது. பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் சார்பில் அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கர்நாடகாவில் உள்ள கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், நீர் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனிடையே மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து 87 அடியாக அதிகரித்துள்ளது. 90 அடியை எட்டும்போது அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறந்துவிடப்படும் என விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.