தமிழ்நாடு

குளிக்கும்போது நீரோட்ட சுழற்சியில் சிக்கிய அண்ணன் சடலமாக மீட்பு – தம்பியும் பலியான சோகம்!

kaleelrahman

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் தம்பி இருவரும் நீரில் மூழ்கிய நிலையில், ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர்கள் திருநாவுக்கரசு - ராஜாமணி தம்பதியினர், காந்தி மார்க்கெட் பகுதியில் பூண்டு வியாபாரம் செய்துவரும் இவர்களுக்கு தினேஷ் (21) மற்றும் ராஜேஷ் (16) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், சில்லத்தூர் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டு நிச்சயதார்த்த விழாவிற்கு குடும்பத்துடன் வந்துள்ளனர்.

இந்நிலையில், தினேஷ் ராஜேஷ் ஆகிய இருவரும் அவர்களது உறவினர்கள் இரண்டு பேருடன் மொத்தம் நான்கு பேர் சேர்ந்து ஊரணிபுரம் கல்லணை கால்வாயில் குளித்துள்ளனர். அப்போது நீரோட்ட சுழற்சியில் சிக்கிய தினேஷ் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் நீருக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதைப்பார்த்த உறவினர்கள் கத்தி கூச்சலிட்டதை அடுத்து அக்கம்பக்கத்தினர் மற்றும் கிராமத்தினர் தண்ணீருக்குள் குதித்து இருவரையும் தேடத் தொடங்கினர்.

அதில் அண்ணன் தினேஷ் சடலமாக மீட்கப்பட்டார். மேலும் கரம்பக்குடி தீயணைப்புத் துறையின் நிலைய அலுவலர் குழந்தை ராஜ் தலைமையில் தீயணைப்பு துறையினர் வந்து காணாமல் போன தம்பி ராஜேஷை தேடி வருகின்றனர். இதையடுத்து சடலமாக மீட்கப்பட்ட தினேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவோணம் காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் காணாமல் போன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.