தமிழ்நாடு

யானையால் கொல்லப்பட்ட பாகன் குடும்பத்துக்கு நிவாரணம் கேட்டு கோரிக்கை

நிவேதா ஜெகராஜா

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் தான் வளர்த்த யானையாலேயே பாகனொருவர் உயிரிழந்துள்ளார். இவரது குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக்கூறி அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துவருகின்றனர்.

தமிழகத்தின் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உலாந்தி வனச்சரகத்தில் கோழிகமுத்தி கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. அங்கு 27 யானைகள் வனத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட அசோக் என்ற 12 வயது யானையின் (பாகன்) காவடியாக, கோழிகமுத்தி மலை கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (வயது 45) மற்றும் முருகன் ஆகியோர் பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல அசோக் என்ற யானைக்கு, உணவு அளித்துவிட்டு மேய்ச்சலுக்காக வனப் பகுதிக்கு அழைத்து சென்றபோது திடீரென அந்த யானை முருகனை தாக்கியது. அதை பார்த்த ஆறுமுகம், அவரை காப்பாற்ற சென்றபோது அவரையும் தாக்கியது. இதில் கீழே விழுந்த ஆறுமுகத்தின், மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் தகவல் கொடுத்ததின் பேரில், வனத்துறையினர் காயமடைந்த ஆறுமுகத்தை ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் மருத்துவமனையில், அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆனைமலை போலீசார், உயிரிழந்த ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சவக்கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று டாப்ஸ்லிப் கோழிகமுத்தி முகாமில் யானை பொங்கல் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டதால், மகிழ்ச்சியில் இருந்த மலைகிராம மக்கள், இந்த சம்பவம் காரணமாக சோகத்தில் மூழ்கியுள்ளனர். மேலும், உயிரிழந்த ஆறுமுகத்தின் குடும்பத்தாருக்கு உரிய நிவாரண தொகையை அரசு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொள்ளாச்சி அருகே கோழிகழுத்தி யானைகள் முகாமில், வளர்ப்பு யானை தாக்கியதில் பாகன் உயிரிழப்பு அரசு உரிய நிவாரணம் வழங்க உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.