தமிழ்நாடு

குடியரசு தினவிழா: திருச்சியில் தேசியக் கொடியை ஏற்றிவைத்த திருநங்கை

kaleelrahman

திருச்சியில் திருநங்கை தேசியக் கொடி ஏற்றிவைக்க, குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நாடு முழுவதும் 72-வது குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருநங்கைகளுக்கு சிறப்பு செய்யும் வகையில் திருச்சி, தென்னூரில் உள்ள சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் இன்று குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.


பள்ளி தலைமையாசிரியர் ஜீவானந்தன் தலைமையில், திருச்சி மாவட்ட திட்ட அலுவலகத்தில் ஊரக வாழ்வாதார இயக்கத்தில் ஓட்டுநராக பணிபுரியும் திருநங்கை சினேகா, தேசத் தலைவர்களின் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பின்னர் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார்.


விழாவில் திருநங்கை சினேகா பேசும்போது, " ஆசிரியர்கள தான் நாம் அனைவருக்கும் முன் உதாரணமாக விளங்க கூடியவர்கள். நாம் கொண்ட லட்சியத்தில் உறுதியாக இருந்தால் வாழ்வில் முன்னேறலாம். எங்களை போல உள்ளவர்களுக்கு இவ்வாய்ப்பு கிடைப்பது நாங்கள் மென்மேலும் தன்னம்பிக்கையுடன் அடுத்த இடத்திற்கு செல்ல உதவும்" என்று கூறினார்.