2026 சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் திமுக-விசிக இடையே மும்முரம். கடந்த தேர்தலில் 6 தொகுதிகள் பெற்ற விசிக, இம்முறை 12 தொகுதிகள் பேரம் பேசுவதாக தகவல்.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மதிமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இரண்டாம் கட்டமாக திமுக தொகுதி பங்கீடு குழு இன்று பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறது.
இந்தசூழலில் விசிக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக இன்று தொடங்கியுள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலில் விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதில் 4 தொகுதிகளில் அந்தக் கட்சி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இந்தமுறை 12 தொகுதிகளை விசிக பேரம் பேசுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக உடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “நடக்கவிருப்பது வழக்கமான, சராசரியான தேர்தல் அல்ல. வலதுசாரி கட்சிகளை காலூன்ற விடக்கூடாது என்பதற்கான தேர்தலாக இது நடக்கவுள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும் தொகுதி பங்கீடு குறித்து பேசிய அவர், “திமுகவுடன் பேரம் பேசும் கட்சியாக நாங்கள் இருக்க மாட்டோம். தொகுதிப் பங்கீடு எங்கள் வலிமைக்கு ஏற்ப அமைய வேண்டும் என தெரியப்படுத்தினோம். எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து திமுகவிடம் பேசவில்லை, எண்ணிக்கை முடிவானபிறகே தொகுதிகளின் நிலவரம் குறித்து முழுமையாக தெரியவரும்” என தெரிவித்தார்.