தமிழ்நாடு

வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92-இல் ஏப்.,17ம் தேதி மறுவாக்குப்பதிவு

webteam

வேளச்சேரி தொகுதிக்கான வாக்குச்சாவடி எண் -92 இல் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வேளச்சேரி தொகுதிக்கான வாக்குச்சாவடி எண் 92-ல் ஏப்ரல் 17-ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6-ம் தேதி முடிந்த நிலையில், அன்றிரவு வேளச்சேரியில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்களை ஸ்கூட்டரில் தூக்கிச் சென்ற நபர்களை மடக்கிப்பிடித்த பொதுமக்கள், அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனால், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சம்பந்தப்பட்ட நபர்களை பொதுமக்களிடம் இருந்து மீட்டு விசாரித்தனர். அதில் வாக்கு இயந்திரங்களைக் கொண்டு சென்றது மாநகராட்சி ஊழியர்கள் என்பது தெரியவந்தது.

ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்டது தேர்தல் வாக்குப்பதிவுக்குப் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் அல்ல என்றும், பழுதான 2 விவிபேட் இயந்திரங்களும், 2 மாற்று இயந்திரங்களும்தான் ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்டது என்றும் தேர்தல் அதிகாரி பிரகாஷ் அறிக்கையில் விளக்கமளித்திருந்த நிலையில், சம்பந்தப்பட்ட அந்த மாநகராட்சி ஊழியர்களுக்குப் போலீசார் சம்மன் அனுப்பினர்.

ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்கு இயந்திரத்தில் வாக்குகள் பதிவாகவில்லை என கூறப்பட்டு வந்த நிலையில், விவிபேட் இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்ததாகவும், விதிமீறல் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று கூறியிருந்தார்.