தமிழ்நாடு

கந்த சஷ்டி கவசம் பாடல் விவகாரம்: கறுப்பர் கூட்டத்தின் மீதான குண்டர் சட்டம் ரத்து

webteam

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த சுரேந்திரன், செந்தில்வாசன் ஆகியோர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கந்தசஷ்டி கவசம் பாடலை ஆபாசமாக சித்தரித்து கருத்து தெரிவித்ததாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் சுரேந்திரன், செந்தில்வாசன், சோமசுந்திரம், குகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் சுரேந்திரன், செந்தில்வாசன் ஆகியோர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஒரே ஒரு வழக்குதான் எங்கள் மீது பதியப்பட்டுள்ள நிலையில் குண்டர் சட்டம் சட்டவிரோதமானது எனவும் மூடநம்பிக்கைகளை ஒழிக்கவும் கல்வியறிவின்மையை ஒழிப்பதற்காகவும்தான் தங்களது பதிவுகளை இட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் ஒருவழக்கிற்காக குண்டர் சட்டம் போடக்கூடாது என்று எந்த விதிகளும் இல்லை எனவும் கறுப்பர் கூட்டம் பதிவால் இந்து மதத்தில் சலசலப்பு ஏற்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், குண்டர் சட்டம் பிறப்பித்த உத்தரவில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அதேபோன்று ஒரு வழக்கிற்காக குண்டர் சட்டம் பதிவு செய்வதை ரத்து செய்ய வேண்டும் என உள்துறை அமைச்சகம் கொடுத்த மனு சரியாக பரிசீலிக்கப்படாமல் காலதாமதம் செய்திருப்பதை காரணம் காட்டி இருவரின் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.