தமிழ்நாடு

குமுளியில் 30 ஆண்டுகளாக சாலையை ஆக்கிரமித்து இருந்த 35 கடைகள் அகற்றம்

kaleelrahman

தமிழக கேரள எல்லையை இணைக்கும் குமுளியில் கடந்த 30 ஆண்டுகளாக சாலையை ஆக்கிரமித்து இருந்த 35 கடைகளை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர்.

தமிழக கேரள எல்லையை இணைக்கும் தேனி - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை கேரளாவிற்குள் செல்கிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையோரம் கம்பம் மேற்கு வனச்சரக எல்லையை ஒட்டிய பகுதி மற்றும் தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கடந்த 30 ஆண்டுகளாக 35 கடைகள் இயங்கி வந்தன.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா பொது ஊடரங்கால் முடங்கிய போக்குவரத்தை பயன்படுத்தி, தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் இருந்து தமிழக குமுளி வரையிலான ஆறு கிலோ மீட்டர் மலைப்பாதையை அகலப்படுத்தும் பணிகளை தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


தேனி - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணியின் ஒரு பகுதியாக இந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டு கடைகளை அகற்ற 15 நாட்களுக்கு முன்னமே தேசிய நெடுஞ்சாலைத் துறையினரால் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனாலும் ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால், தேசியநெடுஞ்சாலைத் துறையினர் தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் இயங்கும் குமுளி மற்றும் கூடலூர் போலீசார் உதவியுடன் தமிழக குமுளி பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த 35 கடைகளை, ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர்.


முன்னதாக கடைகளை இடிப்பதற்கு கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜேசிபி இயந்திரத்தின் முன் படுத்து இடிக்க விடாமல் தடுத்தனர். அவர்களை அப்புறப்படுத்திய பின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. கடைகள் இருந்த இடத்தில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, இரு மாநில எல்லை இணைப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.