தமிழ்நாடு

மத நல்லிணக்கம்: 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்காவில் கார்த்திகை தீப வழிபாடு

kaleelrahman

அவிநாசி அருகே உள்ள கானூரில் முஹம்மத் ஷா வலியுல்லா தர்காவில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் கார்த்திகை தீப வழிபாடு நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அடுத்த சேவூர் அருகே கஸ்பா கானூர் ஊராட்சியில் உள்ள தக்னி சுன்னத் ஜமாத் மஸ்ஜித் முஹம்மத் ஷா வலியுல்லா தர்கா தமிழகத்தில் மிகவும் வாய்ந்தது. சுமார் நானூறு ஆண்டுகள் பழமையான தர்கா, தமிழ்நாடு வக்பு வாரியத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்டு தோறும் சந்தனக்கூடு உருஸ் விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த சந்தனக்கூடு உருஸ் விழாவிற்கு திருப்பூர், கோவை, ஈரோடு, சத்தி, மேட்டுப்பாளையம், சென்னை, போன்ற ஊர்களில் இருந்தும், கர்நாடகம், கேரளா, போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும், சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து சிறப்பு தொழுகையில் கலந்து கொள்கின்றனர்.

மேலும், இப்பகுதி மக்கள் மட்டுமின்றி அவிநாசி சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் தர்காவுக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், கார்த்திகை தீப திருநாளின் போது ஒரு வாரத்திற்கு அப்பகுதி கிராம மக்கள் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.

இது குறித்து தர்கா ஹஜ்ரத், சும்சுதீன் கூறுகையில்... தொழில் விருத்தி, திருமணம், குழந்தை பாக்கியம் என எந்தவொரு வேண்டுதல் வைத்தாலும் நிறைவேறுவதால் இந்த தர்காவிற்கு ஜாதி, மதம், இனம் பாராமல் அனைத்து தரப்பு மக்களும் வருகிறார்கள். மேலும், கார்த்திகை தீபத்தின் போது இப்பகுதியில் உள்ள மக்கள் இங்கு வந்து கார்த்திகை தீபம் ஏற்றுவதை ஆண்டு தோறும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

மத நல்லிணக்கத்துக்கு சிறந்த உதாரணமாக இந்த தர்கா விளக்குகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் சந்தனக்கூடு உரூஸ் விழாவில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டு வழிபட்டு செல்கின்றனர் எனக் கூறினார்.