உறவினர்கள் சாலைமறியல்
உறவினர்கள் சாலைமறியல் pt web
தமிழ்நாடு

காளையார் கோவிலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு அரிவாள் வெட்டு; உறவினர்கள் சாலை மறியல்

PT WEB

செய்தியாளர் நாசர்

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கல்லுவழி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பன். (70). இவர் தனது மனைவி, மருமகள் மற்றும் பேரக்குழந்தையுடன் நேற்று இரவு வீட்டில் உறங்கி உள்ளார். இந்நிலையில், நள்ளிரவில் வீடு புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் 5 பேரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடி உள்ளனர்.

இந்த தாக்குதலில் சின்னப்பன், அவரது மனைவி உபகாரமேரி, மருமகள் வேத போதக அரசி, பேத்தி ஜெர்லின் (12), பேரன் ஜோபி (8) ஆகிய ஐந்து பேர்களும் படுகாயம் அடைந்தனர். அருகில் உள்ளவர்கள் காளையார்கோவில் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவம் இடம் வந்த போலீசார் காயமடைந்த அனைவரையும் மீட்டு சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அடையாளம் தெரியாத நபர்களை பிடிக்க மோப்ப நாய் உதவியுடன் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, வெட்டுப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி கல்லுவழியில் இருந்து காளையார்கோவில் செல்லும் வழியில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையிலான போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர்.