தமிழ்நாடு

தமிழக-கேரள எல்லையில் மறியல்: மீனவர்களை மீட்கக்கோரி உறவினர்கள் போராட்டம்

webteam

நடுக்கடலில் தவிக்கும் மீனவர்களை மீட்டுத்தர வலியுறுத்தி தமிழக-கேரள எல்லையில் மீனவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

தமிழக எல்லையை அடுத்துள்ள கேரளாவின் கோவளம், சங்குமுகம், வல்லியதுறை உள்ளிட்ட கடற்கரை கிராமங்களைச்
சேர்ந்தவர்கள், கன்னியாகுமரி-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தினர். கடலுக்குச் சென்ற மீனவர்களை
மீட்கக் கோரி குழந்தைகளுடன் தாய்மார்கள் மறியலில் ஈடுபட்டது கண்கலங்க வைக்கும் வகையில் இருந்தது. ஒரு
மணிநேரத்திற்கு மேல் மறியல் நீடித்த நிலையில், அங்கு வந்த அதிகாரிகள், புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை மீட்க
எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினர்.

கன்னியாகுமரி மற்றும் கேரளாவைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீன்பிடிப்புக்காக சென்ற நிலையில், ஒகி
புயலால் அவர்கள் கரை திரும்பவில்லை என உறவினர்கள் கூறி வருகின்றனர். உரிய நடவடிக்கை எடுத்து மீட்குமாறு
போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். மீனவர்களை மீட்கும் பணியில் இந்திய கடலோர காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கேரள மாநிலம் கண்ணூர் கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் 28 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதில், உடல்
நலக்குறைவு ஏற்பட்ட 13 மீனவர்களும் கொல்லம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு
வருகிறது.

இதனிடையே, தமிழக மீனவர்கள் 71 பேர் உட்பட 357 மீனவர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை
அமைச்சகத்தின் ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளனர். கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படை மூலம்
தமிழக, கேரள, லட்சத்தீவு மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.