ஈரோட்டில் பிரசவ வலியால் அவதிப்பட்ட கர்ப்பிணியை ஆறு கிலோமீட்டர் தூரத்திற்கு தொட்டில் கட்டி தூக்கிச் சென்ற அவலம் நிகழ்ந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதி கிராமமான சுண்டப்பூரை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி குமாரி. இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து 108 ஆம்புலன்ஸை உறவினர்கள் அழைத்துள்ளனர். ஆனால், கடந்த சில தினங்களாக பெய்த மழையால், மலைப்பகுதியில் பாறைகள் விழுந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆம்புலன்ஸ் வராததையடுத்து குமாரியை கிராம மக்கள், ஆறு கிலோமீட்டர் தூரத்திற்கு தொட்டில் கட்டி தூக்கி வந்தனர்.
பின்னர் சாலையில் காத்திருந்த சரக்கு வாகனத்தில் அழைத்துச்செல்லப்பட்ட குமாரிக்கு, பர்கூர் செல்லும் வழியிலேயே பிரசவமானது. ஆண் குழந்தை பிறந்த நிலையில், பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாயும், சேயும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவசர காலத்தில் இதுபோன்ற இன்னல்களுக்கு ஆளாவது தொடர்கதையாக உள்ளதால், தங்களுக்கு உரிய சாலை வசதி செய்து தர வேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.