தமிழகத்தில் இன்று அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்திற்கு இன்று ரெட் அலர்ட் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், நாளை ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நிர்வாக ரீதியாக அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளதால், மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த ரெட் அலர்ட் என்பது தமிழகம் முழுவதற்கும் பொருந்ததாது. இது ஒரு சில மாவட்டங்களில், குறிப்பிட்ட இடங்களில் அதிகனமழை பெய்யும் என்பதற்காக கூறப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சூறாவளிக் காற்றுவீசும் என்பதால் குமரி, லட்சத்தீவு கடல் பகுதிக்கு 2 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 8 சதவிகிதம் அதிகமாக பெய்துள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.